இந்திய இன, மொழிக் கூறுகள்
இந்தியாவில் வாழும் மக்கள் பல்வேறு இனத்தவராகவும், பல்வேறு சமயத்தினராகவும் காணப்படுகின்றனர். நெட்டையாயும், குட்டையாயும், பருத்தும் சிறுத்தும், கறுத்தும், வெளுத்தும் பல்வேறு உடலமைப்புடன் இந்தியர் காணப்படுகின்றனர். சுருங்கக் கூறின், உலகின் பல்வேறு பாகங்களில் தனித்தனியே காணப்படும் மக்களினத்தின் உடற் கூறுபாடுகளை இந்திய மக்களினத்தில் ஒருங்கே காணலாம். எனவே, இந்தியாவை ‘ உலகின் சுருக்கம்’ என்றும், இந்திய மக்களினத்தின் கூட்டினத்தை ‘ மாந்தரினப் பொருட்காட்சி’ என்றும் கூறுவர். இதற்குக் காரணம், நாம் நில வழியாகவும், நீர் வழியாகவும் ஏறத்தாழப் பதினைந்து அயலினத்தவர்கள் இந்தியாவின் மீது படையெடுத்ததேயாகும். இவ்வினத்தவருள் பலரும் இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கள் ஆட்சியினை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் மொழி, சமயம், பண்பாடு, குருதி முதலியன இந்திய மண்ணில் தோய்ந்து விட்டன.
சிலர் தங்கள் ஆட்சியை நிலைநாட்டாவிடினும்தங்களின் இனச்சாயல்களை, வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே அயல்நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பால், தங்களது பண்பாட்டுப் பரிமாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இத்தகைய காரணங்களாலும், குளிரும் கடும்பனியும், வெப்பமும் பாலையும், காடும் கடலும், சமவெளிகளும் பள்ளத்தாக்குகளுமாக, பல்வேறு இயற்கைக் கூறுபாடுகளுடன், தட்ப வெப்பங்களுடனும் காணப்படும் இந்தியாவின் இயற்கைக் கூறுபாடுகளாலும் இந்திய மக்கள் மேற்குறித்த வேறுபாடுகளுடன் காணப்படுகின்றனர்.
இந்திய மக்களினத்தைக் கீழ்க்கண்ட ஏழு இனங்களாகப் பகுத்தறியலாம்;
·காசுமீரம், பஞ்சாப், இராசபுதனம் ஆகிய பகுதிகளிலுள்ள இந்தோ - ஆரிய இனம்.
·தமிழகம், ஆந்திரம், மைய மாநிலங்கள் சோட்டா நாகபுரி, மைய இந்தியா ஆகிய பகுதிகளிலுள்ள திராவிட இனம்.
·நேபாளம், அசாம் ஆகிய பகுதிகளிலுள்ள மங்கோலிய இனம்.
·ஐக்கிய மாநிலங்கள், பீகார் ஆகிய பகுதிகளிலுள்ள ஆரிய திராவிட இனம்.
·வங்காளத்திலும் ஒரிசாவிலுள்ள மங்கோலிய திராவிட இனம்.
·மராட்டிரத்திலுள்ள சிந்திய திராவிட இனம்.
·வடமேற்கு எல்லைப்புறத்திலுள்ள துருக்கிய - ஈரானிய இனம் ஆகியவனவாகும்.
இவ்வினப்பாகுபாடு உடற்கூற்று நூலின் அடிப்படையில் செய்யப்பட்டது. இவ்வினங்களில் மொழி, பண்பாடு, உடற்கூற்று, சுற்றுப்புறம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்ந்தபின் திராவிட இனமே முதல் இனமாகவும், இந்நாட்டினமாகவும் காணப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பேசும் தென்னக மக்களைத் திராவிட மக்கள் என்கிறோம். எனவே, மற்ற இனத்தவர்களை, இத்திராவிட இனத்தை மையமாக வைத்து அளவிடுவதுமுண்டு. பொதுவாகத் திராவிட இனத்தவர் கருமையாகவும், குறுகிய மண்டையோட்டுடனும் காணப்படுவர். ஆரிய இனத்தவர் வெண்மையாகவும், நீண்ட மண்டையோடுடனும் காணப்படுவர். இவ்விரு வினத்தின் அடிப்படையில்தான் இந்திய மொழிகளும் பண்பாடுகளும் பாகுபடுத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment